திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.121 திருப்பந்தணைநல்லூர் பண் - புறநீர்மை |
இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை
யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்
கடறினா ராவர் காற்றுளா ராவர்
காதலித் துறைதரு கோயில்
கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க்
கோவணங் கொண்டு கூத்தாடும்
படிறனார் போலும் பந்தண நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே.
|
1 |
கழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங்
காட்டுளார் நாட்டுளா ரெனவும்
வழியுளா ரெனவும் மலையுளா ரெனவும்
மண்ணுளார் விண்ணுளா ரெனவுஞ்
சுரியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார்
தொண்டர்வாய் வந்தன சொல்லும்
பழியுளார் போலும் பந்தண நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே.
|
2 |
காட்டினா ரெனவும் நாட்டினா ரெனவுங்
கடுந்தொழிற் காலனைக் காலால்
வீட்டினா ரெனவுஞ் சாந்தவெண் ணீறு
பூசியோர் வெண்மதி சடைமேற்
சூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார்
சொல்லுள சொல்லு நால்வேதப்
பாட்டினார் போலும் பந்தண நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே.
|
3 |
முரகினார் பொழில்சூழ் உலகினா ரேத்த
மொய்த்தபல் கணங்களின் றுயர்கண்
டுருகினா ராகி உறுதிபோந் துள்ளம்
ஒண்மையால் ஒளிதிகழ் மேனி
கருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக்
கடலுள்நஞ் சமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தண நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே.
|
4 |
பொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து
பொறிகிளர் பூணநூல் புரள
மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவம்
மேவுவெண் ணீறுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க் கறமமர்ந் தருளித்
தொன்மையார் தோற்றமுங் கேடும்
பன்னினார் போலும் பந்தண நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே.
|
5 |
ஒண்பொனா ரனைய அண்ணல்வாழ் கெனவும்
உமையவள் கணவன்வாழ் கெனவும்
அண்பினார் பிரியார் அல்லுநண் பகலும்
அடியவர் அடியிணை தொழவே
நண்பினார் எல்லாம் நல்லரென் றேத்த
அல்லர் தீயரென் றேத்தும்
பண்பினார் போலும் பந்தண நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே.
|
6 |
எற்றினார் ஏதும் இடைகொள்வா ரில்லை
இருநிலம் வானுல கெல்லை
தெற்றினார் தங்கள் காரண மாகச்
செருமலைந் தடியிணை சேர்வான்
முற்றினார் வாழும் மும்மதில் வேவ
மூவிலைச் சூலமும் மழுவும்
பற்றினார் போலும் பந்தண நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே.
|
7 |
ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப
வோசையால் ஆட லறாத
கலிசெய்த பூதங் கையினா லிடவே
காலினாற் பாய்தலும் அரக்கன்
வலிகொள்வர் புலியின் உரிகொள்வ ரேனை
வாழ்வுநன் றானுமோர் தலையிற்
பலிகொள்வர் போலும் பந்தண நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே.
|
8 |
சேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ்
செங்கண்மா லிவரிரு கூறாத்
தோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார்
துணைமையும் பெருமையுந் தம்மில்
சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச்
சரண்கொடுத் தவர்செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தண நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே.
|
9 |
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
10 |
கல்லிசை பூணக் கலையொலி ஓவாக்
கழுமல முதுபதி தன்னில்
நல்லிசை யாளன் புல்லிசை கேளா
நற்றமிழ் ஞானசம் பந்தன்
பல்லிசை பகுவாய்ப் படுதலை யேந்தி
மேவிய பந்தண நல்லூர்
சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல்
தொல்வினை சூழகி லாவே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |